4½ ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை - எடப்பாடி பழனிசாமி
- விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு.
- கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவையாறில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த விழா நமது குடும்பவிழா. இதில் கலந்து கொண்டு வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவருக்கும் பொன்னான நாள் என்றால் அது திருமண நாள் தான். அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். டெல்டா மாவட்டங்கள் விவசாயம் நிறைந்த மாவட்டம். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அ.தி.மு.க. அரசு துணை நின்றது.
இங்கு மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. அப்போது விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். ஆனால் இந்த திட்டங்களை எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தியதோடு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அது மட்டுமின்றி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடு, மாடுகள் கொடுத்து உதவினோம்.
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அங்கு கருணாநிதி குடும்பத்தினர் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்கள். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கான கட்சி. இங்கு கடைகோடி தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வர முடியும். எத்தனையோ சோதனைகளை எல்லாம் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சாதனைகளாக மாற்றினார்கள்.
கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை. அப்போது தமிழக அரசுக்கு வரிவருவாய் கிடையாது. இருப்பினும் சிறப்பான நிர்வாக திறமையால் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 4½ ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இது தான் தி.மு.க. அரசின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.