தமிழ்நாடு செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது - ராமதாஸ்

Published On 2026-02-08 13:54 IST   |   Update On 2026-02-08 13:54:00 IST
  • இளைஞர்களின் ஒரே நம்பிக்கை போட்டித்தேர்வின் மூலம் அரசுப்பணியில் சேர்வது.
  • போட்டித்தேர்வில் அரசு பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியத்தை புரிந்து கொள்வது என்பது போட்டித்தேர்வின் கேள்விகளைவிட கடினமானதாகத்தான் உள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குளறுபடிகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். இன்று நடைபெற இருந்த குருப் 2, 2A தேர்வுக்கு சென்னை, அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட மையங்களில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் தேர்வர் எண் இல்லை என்பன உள்ளிட்ட புகார்களை கூறி சுமார் 500 தேர்வர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கரோனா தொற்று காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்புகின்றன. ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோர் தேர்வானது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் வெளியாகி மேலும் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.

கடந்த 2023 மே மாதம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் தனியார் கல்லூரி மையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற தேர்வு முடிந்த பிறகு பிற்பகல் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்னும் விதியின் அடிப்படையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை உள்ளே விட அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இது குறித்த விசாரணை நடைபெற்றது. இது குறித்து சட்டமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பின் அதன் முடிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

இளைஞர்களின் ஒரே நம்பிக்கை போட்டித்தேர்வின் மூலம் அரசுப்பணியில் சேர்வது. அதற்கான நுழைவு வாயில்களில் ஒன்றாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி காட்டும் அலட்சியப்போக்குக்கு அளவே இல்லை என்பதற்கு இன்றைய குளறுபடியும் உதாரணம். தொடர்ந்து போட்டித்தேர்வில் அரசு பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியத்தை புரிந்து கொள்வது என்பது போட்டித்தேர்வின் கேள்விகளைவிட கடினமானதாகத்தான் உள்ளது.

இன்று நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக அறிவித்து இளைஞர்களுக்கு தேர்வாணையம் மீது நம்பிக்கை பொய்த்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட…!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News