உள்ளூர் செய்திகள்

பவானி லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலத்தில் இன்று காலை விபத்தில் தந்தை-மகன் பலி

Published On 2023-06-25 14:02 IST   |   Update On 2023-06-25 14:02:00 IST
  • கண்டெய்னர் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் உரசியது.
  • விபத்து நடந்த பகுதி சேலம்-கோவை பைபாஸ் சாலை என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பவானி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சீதாராம் பாளையம் சத்திவேல்நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (65). இவரது மகன் தனசேகரன் (34). இவர்கள் 2 பேரும் இன்று காலை ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஜாதகம் பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். அவர்கள் பவானி லட்சுமிநகர் காவிரி ஆற்று பாலத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் வெப்படைக்கு 14 சக்கரம் கொண்ட கண்டெய்னர் லாரி பஞ்சு லோடு ஏற்றிக் கொண்டு சென்றது. லாரியை கேரளாவைச் சேர்ந்த ஹக்கீம் (47) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது திடீரென கண்டெய்னர் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் நிலைத்தடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது பின்பக்க சக்கரங்கள் அவர்கள் மீது ஏறி இறங்கி நசுக்கியது. இதில் ஞானசேகரன் அவரது மகன் தனசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மூளை சிதறி பலியானர்கள்.

இது குறித்து தெரிய வந்ததும் சித்தோடு போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த பகுதி சேலம்-கோவை பைபாஸ் சாலை என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News