உள்ளூர் செய்திகள்

மரத்தில் மோதி நிற்கும் பள்ளி வாகனம். 

பள்ளி வாகனம் மரத்தில் மோதி 20 மாணவர்கள் காயம்

Published On 2023-02-27 08:34 GMT   |   Update On 2023-02-27 08:34 GMT
  • சிவகங்கை அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதி 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

தேவகோட்டை

சிவகங்கையில் செயல் பட்டு வரும் தனியார் பள்ளியில் சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை தாயமங்கலத்தில் இருந்து பள்ளி வாகனம் வந்துள்ளது.

இந்த வாகனம் தாயமங்கலம், சாத்திரசன்கோட்டை பகுதியில் 22 மாணவ-மா ணவிகளை ஏற்றிக்கொண்டு வேலாங்குளம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வேலான்குளம் கிராமத்தினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் 10 பேர் சாத்திரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். சிவகங்கை தாலுகா போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளி வாகனம் தாமதமாக வந்ததாகவும், ஓட்டுநர் வேகமாக இயக்கியதும், பள்ளி வாகனத்தில் உதவியாளர் யாரும் இல்லாததும், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News