ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்து
- ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது
- காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 5 பேர்
புதுக்கோட்டை:
மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பாலத்திலிருந்து தலைக்குப்பற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து க்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சிறிய காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து நேற்று இரவு சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இதில் தொண்டியிலிருந்து 2 பேரும், மீமிசலிலிருந்து 2 பேர் என ஓட்டுனர் உட்பட மொத்தம் 5பேர் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை ஜெகதாபட்டினம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முத்தனேந்தல் பாலத்தின் மீது மோதி தலைக்குப்பற கவிழ்ந்தது.
அப்போது பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயிருக்கு போராடி சத்தமிட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியோடு விபத்தில் காயமடைந்த அருள்ப்ரீத்தி (வயது 26), ஜேம்ஸ்பாலன் (30), நஜ்புநிஷா (50), அகமது (10), ஒட்டுனர் விஜயகுமார் (39)ஆகிய 5 பேரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பேருந்தில் ஓட்டுனர் உட்பட 5 பேர் மட்டுமே பயணம் செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.