அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி
- அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.
- ஸ்கேன் பார்ப்பதற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக கூறுகின்றனர்.
தென்காசி:
தென்காசி தாலுகா திப்பனம்பட்டி கிராமம் அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள் பணியாற்றி வந்தநிலையில் கடந்த 6 மாத காலமாக ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.
வாரத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரி சோதனைகள் செய்வதற்கு மருத்துவர் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது.
இங்கு பணியில், இருக்கும் ஒரு மருத்துவரும் கர்ப்பிணி பெண்களிடம் கூறும் பதில், தென்காசிக்கு செல்லுங்கள். இங்கே நான் ஒருவர் என்ன செய்ய முடியும். அதனால் ஸ்கேன் பார்ப்பதற்கு தென்காசிக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார். தென்காசி சென்றால் அங்கும் இன்று போய் நாளைவா என்று கூறி கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக புகார் கூறுகின்றனர்.
தினசரி கூலிக்கு வேலைக்கு செல்லும் நபர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர். இவர்கள் தென்காசிக்கு செல்வதற்கு இங்கிருந்து பஸ் போக்கு வரத்து வசதிகள் ஏதும் கிடையாது.
எனவே இதை கவனத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் நலன்கருதி தேவையான மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழன் மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.