உள்ளூர் செய்திகள்

விபத்தில் கணவன் பலி; சிகிச்சை பலனின்றி மனைவியும் சாவு

Published On 2023-10-31 09:47 GMT   |   Update On 2023-10-31 09:47 GMT
  • மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர்.
  • கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி அருகே நல்லூர் மின்வாரிய அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(34) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து லாரி குழந்தைவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைவேலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே குழந்தைவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியும் இறந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News