உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

Published On 2023-08-09 14:58 IST   |   Update On 2023-08-09 14:58:00 IST
  • கொலை வழக்கில் நாங்கள் கொடுத்த புகார் மனுவை விசாரித்து அதன்படி வழக்குப்பதிவு செய்ய மறுத்து வருகிறார்கள்.
  • விசாரணையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவர் கடந்த 4-ந்தேதி இரவு சந்திப்பு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந் போது ஒரு கும்ப லால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

உடலை வாங்க மறுப்பு

இது தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல நத்தம் பகுதியில் வசிக்கும் கண்ணன், சுடலை கண்ணு, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களது பெயரை வழக்கில் சேர்க்கும் வரை மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று 5-வது நாளாக அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மாயாண்டியின் தந்தை பலவேசம், மாயாண்டியின் மனைவி மாரிச்செல்வி, அவரது 2 மகன்கள் உள்ளிட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆர்.டி.ஓ. கார்த்திகேயினியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்

சந்திப்பு போலீசார் எனது மகன் கொலை வழக்கில் நாங்கள் கொடுத்த புகார் மனுவை விசாரித்து அதன்படி வழக்குப்பதிவு செய்ய மறுத்து வருகிறார்கள். இதனால் மீண்டும் எனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

காவல்துறை அதிகாரிகளிடம் ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தியும் வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இந்த விசாரணையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எனவே நாங்கள் கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

தொடர்ந்து அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனிடம் இது தொடர்பாக முறையிட்டு சென்றனர். கோர்ட்டு மூலமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை என்று வலியுறுத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News