தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- சக்கிமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.
மதுரை
மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்மேடு பகுதியில் எம்.ஜி.ஆர் நகர், பி.டி.ஆர். நகர், நரிக்குறவர் காலனி, அன்னை இந்திரா நகர், சத்யா நகர், அம்பேத்கர் நகர், அஞ்சுகம் நகர் ஆகியவை உள்ளன. இங்கு 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அம்பேத்கர் நகர் முதல் அஞ்சுகம் நகர் வரை தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்து சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
எனவே அம்பேத்கர் நகருக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஆகியவை வருவதில்லை. அம்பேத்கர் நகரில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி. நிதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதன்பிறகு அங்கு எந்தவித பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கல்மேட்டில் உள்ள சிலைமான் புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளது. 4 ரோடு சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.
அம்பேத்கர் நகரில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும், வணிக வளாகம் கட்டிடம் மற்றும் புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.