குலசேகரம் அருகே இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள்
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
- இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
திருவட்டார் :
குலசேகரம் அருகே இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சில சம்பவங்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் குற்றச் செயல்கள் குறைந்தன.
இந்த நிலையில் தற்போது அதே பாணியில் மீண்டும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த காட்சியில் நள்ளிரவில் ஒரு காரில் 2 மர்ம நபர்கள் ஒரு வீட்டின் முன்பு வந்து இறங்குகின்றனர். அந்த பகுதியில் நோட்டம் போடும் அவர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
திடீரென ஒரு வீட்டின் கேட்டை உடைக்கிறார்கள். பால் வாங்குவதற்காக கேட்டில் மாட்டப்பட்டிருந்த பால் வாங்கும் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காரில் தப்பி செல்கின்றனர்.
இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் கும்பல் குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.