உள்ளூர் செய்திகள்

கோவையில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-07-16 14:45 IST   |   Update On 2023-07-16 14:45:00 IST
  • ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.
  • இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார்.

குனியமுத்தூர்,

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெருமாள் (வயது 25). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம்.

அப்போது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பெருமாளுக்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு வரும் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வர்ஷா (19) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அடிக்கடி பார்த்து கொண்டதால் 2 பேரும் நட்பாக பேசி வந்தனர். நட்பு காதலாக மாறியது. 2 பேரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை மாற்றி கொண்டு செல்போனிலும், அடிக்கடி நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என காதல் ஜோடி முடிவு செய்தது.

அதன்படி நேற்று வர்ஷா தனது தாயிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். அவர் நேராக தனது காதலன் பெருமாளை சந்தித்து அவருடன் பேரூருக்கு சென்றார்.

அங்குள்ள ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்தால் தங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் 2 பேரும் நேராக மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். இதை கேட்டதும் பதறி போன 2 வீட்டு பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு தங்கள் பிள்ளைகள் மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்ததும் 2 வீட்டு பெற்றோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் பெண்ணிடம், வாலிபரின் பெற்றோர் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் 2 பேருமே நாங்கள் மேஜர் ஒன்றாகவே வாழ்வோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு, பெண்ணையும், வாலிபரையும், வாலிபரின் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News