உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-09-29 09:51 GMT   |   Update On 2022-09-29 09:51 GMT
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
  • இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

ஈரோடு:

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன.

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. உடனடியாக இந்த தடை அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

ஈரோடு காவிரிரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பச்சபாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கும், இந்து முன்னணி கட்சி அலுவல கத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம் கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர்.

Tags:    

Similar News