உள்ளூர் செய்திகள்

வீரவநல்லூர் அருகே கன்னடியன் கால்வாயில் மூழ்கி சமையல் தொழிலாளி பலி

Published On 2023-10-05 08:57 GMT   |   Update On 2023-10-05 08:57 GMT
  • சுப்பிரமணியன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
  • இன்று காலை சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 35). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

இவர் நேற்று வீரவ நல்லூர் அருகே கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவரது சைக்கிள் மற்றும் ஆடைகள் மட்டும் இருந்தன.

இதனால் அவர் கால்வாயில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீரவநல்லூர் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

இந்நிலையில் இன்று காலை கொட்டாக்குறிச்சி பகுதியில் சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கன்னடியன் கால்வாயிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டது. அதில் குளிக்க சென்ற சுப்பிரமணியன் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News