உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-07-29 14:51 IST   |   Update On 2023-07-29 14:51:00 IST
  • ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
  • கடனுதவி சலுகைகளை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.5 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

கோவை மாவட்ட தென்னை நார் தொழிற்சாலைகளில் கொப்பரை, தென்னை நார், காகித அட்டை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு அவற்றை விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள உலர் களங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே தென்னை நார்களை வெயிலில் உலர வைக்க முடியவில்லை. இதனால் அங்கு நார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கொப்பரை, தென்னை நார், காகித அட்டை ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் எங்களின் தொழில் வெகுவாக முடங்கி உள்ளது. இதனால் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு கடனுதவி சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News