#TNAssemblyElection சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியை குறி வைக்கும் ரவீந்திரநாத்- உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி
- ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.
- தி.மு.க.வில் தற்போது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாக உள்ள மகாராஜன் வருகிற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் இணைந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார். இதே போல் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், ஓ.பி.எஸ்.சின் மகனுமான ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளார். இது தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வில் தற்போது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாக உள்ள மகாராஜன் வருகிற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். அவருக்கும் தங்க தமிழ்செல்வன் எம்.பி.க்கும் அடிக்கடி கட்சியில் மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
அரசு விழாவில் இது பயங்கரமாக வெடித்த நிலையில் இருவரும் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதனால் மகாராஜன் எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக ரவீந்திரநாத்தை களமிறக்க அவர் ஆதரவு கரம் நீட்டி வருகிறார். தற்போது கட்சியில் இணைந்து உடனடியாக ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதால் ஏற்கனவே தொகுதியை குறி வைத்து கட்சி பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரும்பாலும் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் தி.மு.க. சார்பில் ரவீந்திரநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்கு எவ்வாறு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்றுவார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின்பே தெரிய வரும்.