பள்ளி தேர்வுகள் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடிய கொடைக்கானல்
- கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
- ஏப்ரல் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டின் அனைத்து மாதங்களும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே காணப்படும். குறிப்பாக கோடை காலங்களிலும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
கொடைக்கானலில் தற்போது பனி சீசன் நிறைவடைந்து கோடைசீசன் தொடங்க உள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளிகளில் தேர்வுகள் தொடங்கி இருப்பதால் கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நட்சத்திர ஏரியிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ஒருசில படகுகளே இயக்கப்படுகின்றன. அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில் அடுத்தடுத்து மற்ற பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.