உள்ளூர் செய்திகள்

கோவை மாநகரில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் தள்ளி நிற்கும் பஸ்கள்

Published On 2023-08-05 15:19 IST   |   Update On 2023-08-05 15:19:00 IST
  • கால்கடுக்க புத்தக மூட்டையுடன் மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்
  • பயணிகளை ஏற்றி செல்வது ஓட்டுநர்களின் இன்றியமையாத கடமை என மக்கள் தெரிவித்தனர்.

பொதுவாக மனிதன் வாழும் வாழ்க்கையில் பஸ்களின் அவசியம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் பஸ் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை விட நகர பஸ்களின் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது. ஏனெனில் பொதுமக்கள் நகர்ப்புற எல்லைக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நகரப் பஸ் மட்டுமே அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

அத்தகைய நகர பஸ்களை தினமும் காலை மற்றும் மாலை சமயங்களில் உபயோகப்படுத்தாத மக்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நகர பஸ்கள் உரிய நிறுத்தத்தில் நிற்பது கிடையாது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிலும் காலை நேரங்களில் பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கூட்டத்தை காணும் போது, டிரைவர் வேண்டுமென்றே வேகத்தை கூட்டி அவர்கள் நிற்கக்கூடிய இடத்தை தாண்டி செல்வார். இது அன்றாடம் நடைபெறும் நிகழ்வு ஆகிவிட்டது. ஒரு சில பஸ்கள் நிற்காமல் சென்று விடும். மற்ற சில பஸ்கள் நிறுத்தத்தை விட்டு, சிறு தூரம் கடந்து சென்று நிற்கும். அப்போது பள்ளி மாணவிகள் தனது புத்தக சுமையையும் தோளில் தொங்க விட்டுக்கொண்டு ஓடி பிடித்து, முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது வழக்கம். இது தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது என அன்றாடம் பயணிப்பவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இவ்வாறு பஸ்கள் நிற்காமல் செல்லும்போது, அதன் பின்னால் வரும் தனியார் பஸ்கள் நிறுத்தி அனைவரையும் ஏற்றி விட்டு செல்கின்றனர். அந்த இடத்தில் தனியார் பஸ்களில் வருமானம் அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது போன்ற ஒரு மாயை ஏற்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் பஸ்சை எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் வாகனங்கள் அல்லாத நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே பஸ்களை எதிர்பார்த்து பயணம் செய்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பஸ் பயணத்தை நம்பியே உள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களை புறக்கணித்து விட்டு பஸ்கள் செல்வது மாணவ மாணவிகளுக்கு கஷ்டமாக உள்ளது. காலையிலேயே பஸ் மூலம் அவர்கள் மனது உடையும்போது அன்றும் முழுவதும் பள்ளி படிப்பில் கவனம் செலுத்துவதே முடியாது.

இதனால் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு செல்வதற்கு கூட ஒரு வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பஸ் ஓட்டும் டிரைவர்கள் இதை கவனத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி, மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்வது அவர்களது இன்றியமையாத கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News