உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பொட்டாஷ் பாக்டீரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு

Published On 2022-09-29 07:22 GMT   |   Update On 2022-09-29 07:22 GMT
  • கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் விவசாயிகளுக்கு பொட்டாஷ் பாக்டீரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
  • மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தினை சுரந்து பயிர்வளர்ச்சியினை மேம்படுத்துகிறது.

பரமத்தி வேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொட்டாசியம் பயிர்வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் துணை புரிகின்றது. நீர் மற்றும் இலை உற்பத்தி செய்யும் பொருட்களை செடிகளின் பல்வேறு பாகங்களுக்கு கடத்துவதற்கு பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து உதவுகிறது. தண்டுப்பகுதிகளுக்கு உறுதியை அளித்து செடிகள் சாயாமல் இருக்கவும், பூச்சி, நோய்க்கிருமிகள் செடிகளை எளிதில் தாக்காமல் இருக்கவும் சாம்பல் சத்து பயன்படுகிறது.

பிரச்சூரியா ஆரென்சியா என்ற பொட்டாசியத்தை இடம்பெயரச் செய்யும் பாக்டீரியா மண்ணில் கரையாமல் கனிமநிலையில் உள்ள பொட்டாசியத்தை கரிம அமிலங்கள் மற்றும் நொதிகளை சுரந்து கரைத்து பயிர்களுக்கு அளிக்கிறது. மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தினை சுரந்து பயிர்வளர்ச்சியினை மேம்படுத்துகிறது. எனவே விவசாயிகள் மேற்கண்ட பிரச்சூரியா ஆரென்சியா என்ற பொட்டாசியத்தை இடம்பெயரச் செய்யும் பாக்டீரியாவை தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் அல்லது ரைசோபியம், மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் பாஸ்போபாக்டீரியாவுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

இந்த பாக்டீரியா திட மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கிறது. இதனால் மண்ணில் உள்ள இயற்கையாக கிடைக்கும் சாம்பல் சத்தினை பயிர்கள் எடுத்துக்கொள்வது சுலபமாகி, பொட்டாஷ் உரத்திற்கு செலவிடும் தொகையினை விவசாயிகள் சேமிக்கலாம். இந்த பாக்டீரியாவை பயிர்களுக்கு பயன்படுத்தி பலன் அடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News