உள்ளூர் செய்திகள்

சம்பளம் பாக்கி: திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு 200 தூய்மை பணியாளர்கள் மறியல்

Published On 2023-06-15 12:31 IST   |   Update On 2023-06-15 12:31:00 IST
  • திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு சிவன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
  • அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் சரிவர பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் சமபள பாக்கியை கண்டித்தும், அதனை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இன்று காலை சுமார் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சிவன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாட்ஷா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பளப் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் தூய்மை பணியாளர்களின் சுமார் 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News