பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்த இளம்பெண்
- குழந்தையை கொடுப்பது போல நடித்து கைவரிசை
- பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஓடையாகுளம் சுப்பையா நகரை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி மணியம்மாள் (வயது 60).
சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சிக்கு செல்வதற்கு திட்டமிட்டார். அதன்படி ஓடையாகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிக மாக இருந்ததால் இளம்பெண் தனது குழந்தையை மணியம்மாளிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தெரியாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை இளம்பெண் பறித்தார். பின்னர் இளம்பெண் மார்க்கெட் சந்திப்பில் இறங்கி சென்றார். அதன் பின்னர் மூதாட்டி தனது கழுத்தை பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது.
இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.