ஊட்டி அருகே மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
- லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மண்சரிவும் ஏற்பட்டது.
ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீடுகள் சேதம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக மழை சற்று ஒய்ந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரும் தேங்கியது.
இன்று காலை ஊட்டி அடுத்த லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.