விருத்தாசலத்தில் வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிப்பு செய்ய கோரிஆர்ப்பாட்டம்
- சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது.
- இத்தனை ஆண்டுகள் தான் வசிக்கும் இடங்கள் மதிப்பு இழந்து விட்டதையும் கண்ட அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
கடலூர்:
விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் 100-க்கு மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழக வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கோர முடியாது எனவும் அறிவிப்பு வெளியிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தின் இந்த அறிவிப்பை கண்டு அந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இத்தனை ஆண்டுகள் தான் வசிக்கும் இடங்கள் மதிப்பு இழந்து விட்டதையும் கண்ட அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விருத்தாச்சலம் பாலக்கரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர், வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிக்க கோரியும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் அம்பேத்கர், சிவாஜி சிங், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.