உள்ளூர் செய்திகள்

சூலூரில் வாலிபரை அரிவாளால் வெட்டி மோட்டார் சைக்கிளை பறித்த கும்பல்

Published On 2023-08-04 15:03 IST   |   Update On 2023-08-04 15:03:00 IST
  • நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
  • விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).

இவர் தென்னம்பாளையத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் லோகநாதன், அருண், கார்த்திகேயன்.

சம்பவத்தன்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

விக்னேஷ், லோகநாதன் ஒரு வாகனத்திலும், அருண் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தனர்.

இவர்கள் தென்னம்பாளையம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓட்டல் அருகே வந்த போது, 3 பேர் கும்பல் நின்று கொண்டிருந்தனர். திடீரென அந்த கும்பல் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

அப்போது, விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.

அப்போது திடீரென அதில் இருந்த ஒருவர் கார்த்திகேயனின் (25) கையை வெட்டினார். மேலும் மற்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதுடன், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News