செய்திகள்
மருதாடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மருதாடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி அருகே மருதாடு கிராமம் பஜார் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 19). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வந்தவாசியில் உள்ள சினிமா தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு மருதாடு கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிவராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று கூறினர்.
இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.