செய்திகள்
பிச்சாவரத்தில் படகுகள் ஓய்வெடுக்கும் காட்சி.

கொரோனாவால் மூடப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் திறப்பு

Published On 2020-12-07 07:41 IST   |   Update On 2020-12-07 07:41:00 IST
கொரோனாவால் மூடப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் நேற்று திறக்கப்பட்டது.
அண்ணாமலைநகர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுரபுன்னை காடுகளை கொண்ட சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்துக்கு நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறை சார்பில் இயக்கப்படும் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை கண்டு ரசித்து செல்வார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16-ந்தேதி பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் தமிழக அரசு சுற்றுலா தலங்களை திறக்க உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் நேற்று திறக்கப்பட்டது. இருப்பினும் புரெவி புயல் காரணமாக சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் சுற்றுலா மையத்துக்கு பயணிகள் வரவில்லை. இதனால் சுற்றுலா மையம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா மையம் மூடப்பட்டிருந்ததால் நீண்ட நாட்களாக படகு சவாரி இல்லாமல் வறுமையில் அவதிபட்ட படகு ஓட்டுனர் கள் நேற்று ஆர்வமுடன் வேலைக்கு வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த சுற்றுலா மையம் நேற்று திறக்கப்பட்டு, மழை காரணமாக பயணிகள் வராததால், படகு ஓட்டுனர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News