செய்திகள்

கணவர் கண்டித்ததால் வேதனை - சாணிப்பவுடர் குடித்து 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

Published On 2019-05-08 16:53 IST   |   Update On 2019-05-08 16:53:00 IST
சிங்காநல்லூர் அருகே கணவர் கண்டித்ததால் மனைவி மற்றும் 2 மகள்கள் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்காநல்லூர்:

கோவை ஒண்டிப்புதூர் சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வீட்டோடு ஹார்டுவேர்ஸ் மற்றும் ஜவுளிகடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோதை ஹரிபிரியா (வயது 44). இவர்களுக்கு ஜனனி ஸ்ரீ (18), தர்ஷினி (15) என்கிற 2 மகள்கள் உள்ளனர். ஜனனிஸ்ரீ கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தர்ஷினி 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

கோதை ஹரிபிரியா கடந்த சில நாட்களுக்கு தனது மூத்த மகளான ஜனனி ஸ்ரீக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இதனால் ஜனனி ஸ்ரீ அடிக்கடி தனது தோழிகளுடன் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மற்றும் மகளை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி கடைக்கு சென்று விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த கோதை ஹரிபிரியா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து ஜனனிஸ்ரீ, தர்ஷினி ஆகியோருக்கு கொடுத்தார். பின்னர் தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கினர்.இரவு 10 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி மற்றும் மகள்கள் சாணிப்பவுடர் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பரிசோதனை செய்த அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News