செய்திகள்

கோவையில் ஜவுளிக்கடை ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-02-15 10:00 GMT   |   Update On 2019-02-15 10:00 GMT
கோவையில் ஜவுளிக்கடை ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கொடைக்கானல் அருகே உள்ள பன்னக்காட்டை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் ராஜேஷ் கண்ணா (வயது 24).

இவர் கோவை ஒப்பணகார வீதியில் உள்ள ஜவுளிக் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக ராஜேஷ் கண்ணா மகாளியம்மன் கோவில் வீதியில் ஜவுளிக்கடைக்கு சொந்தமான குடோனில் சக ஊழியர்களுடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மாலை இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு குடோனுக்கு திரும்பினார். குடோனில் இருந்த ராஜேஷ் கண்ணா திடீரென பூச்சி மருந்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் ராஜேஷ் கண்ணாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இரவு ராஜேஷ் கண்ணா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணா காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News