திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த ஸ்டாலின் கெஞ்சினார்- அமைச்சர் சீனிவாசன் பேச்சு
பழனி:
பழனியில் அ.தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால் அவரது மகன், மகள், பேரன்கள் என அனைவரும் இந்தி பேசி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் வடமா நிலத்திற்கு சென்று இந்தியில் பேசுகிறார். எனவே மொழிப் போர் தியாகிகளுக்காக தி.மு.க. கூட்டம் நடத்துவது வேதனையான செயல்.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பார்த்து இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுவதாக பிரசாரம் செய்து வருகின்றார்.
எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயங்காது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்த அரசை கலைக்க நினைக்கும் ஸ்டாலின், தினகரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத மு.க.ஸ்டாலின் தற்போது கிராமம் கிராமமாக கூட்டம் நடத்தி வருகிறார். தரையில் அமர்ந்தாலும், உருண்டு புரண்டாலும் அவரால் முதல்வர் ஆக முடியாது.
சசிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர தினகரனுக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. சசிகலாவால் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து பல கோடி சொத்துக்களை கொள்ளையடித்தார். தற்போது அந்த பணத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது முதல்வர் கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin