செய்திகள்

குடிபோதையில் தகராறு: டிரைவரை கொன்ற வாலிபர் கைது

Published On 2019-01-19 08:50 GMT   |   Update On 2019-01-19 09:17 GMT
குடிபோதையில் தகராறில் டிரைவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் மணிகண்டன் (38). டிரைவர். நேற்று இரவு மணிகண்டன் குடித்துவிட்டு நாகல்கேணி பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் வந்த மற்றொரு வாலிபருடன் தகராறு ஏற்பட்டது.

வாய்தகராறு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் உள்ள காய்கறி கடையில் இருந்தகத்தியை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் உயிர் இழந்தார்.

சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். விசாரணையில் நாகல்கேணி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (37) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த போது மணிகண்டன் தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து வாலிபர் அருள்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News