கன்னங்குறிச்சியில் செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தற்கொலை
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி ஆறுமுகஅய்யர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன் என்ற பிரபு (வயது 25).
ஐ.டி.ஐ.படித்துள்ள இவர் சேலத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக தனது பெற்றோரிடம் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி தரும்படி மணிகண்டன் கேட்டு வந்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி வாங்கி தருவதாக அவரது பெற்றோர் கூறி வந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்தும் செல்போன் வாங்கி தர வில்லையே என்று மணிகண்டன் மீண்டும் கேட்டார். அப்போது விரைவில் வாங்கி தருவதாக கூறினர்.
நேற்றிரவு 11 மணியளவில் தனது அறைக்கு மணிகண்டன் தூங்க சென்றனர். அப்போது நீண்ட நேரமாக அறை விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டினர். கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறினர். உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் வாங்கி கொடுக்காததால் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.