செய்திகள்

குடியாத்தம் அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது

Published On 2019-01-09 11:02 GMT   |   Update On 2019-01-09 11:02 GMT
குடியாத்தம் அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம்:

குடியாத்தம் - காட்பாடி ரோடு ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் உதயசூரியன் (வயது 25), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

உதயசூரியன் 2 ஆண்டுகளுக்கு முன்புஉஷா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று மாலையில் உதயசூரியனும், அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவரும் குடியாத்தம் காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தி உள்ளனர். அப்போது செதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த பெயிண்டர் ராஜா மதுகுடிக்க வந்தார். குடிபோதையில் இருந்த உதயசூரியன் நண்பர் மகேந்திரனுக்கும், ராஜாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது மகேந்திரனுக்கு ஆதரவாக சென்று ராஜாவை உதயசூரியன் தாக்கினார். இதனையடுத்து ராஜா தனது உறவினரான பெயிண்டர் ரமேசை போன் செய்து அழைத்தார்.

இந்த நிலையில் சுமனும், உதயசூரியனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சக்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

பின்னர் திடீரென ராஜா, ரமேஷ் ஆகியோர் உதயசூரியனை கத்தியால் கழுத்து, தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ரமேஷ் மற்றும் இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்ததாக உதயசூரினின் நண்பர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News