செய்திகள்

குழித்துறை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

Published On 2018-12-19 12:21 GMT   |   Update On 2018-12-19 12:21 GMT
குழித்துறை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை:

குழித்துறையை அடுத்த நட்டாலம் வாத்தியார் விளையைச் சேர்ந்தவர் ராஜேஷ், (வயது 35).

ராஜேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரது ஆட்டோ, இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கக்குளம் கரையில் குளத்தையொட்டி நின்றது.

இன்று அதிகாலை குளத்திற்கு குளிக்க சென்றவர்கள் குளத்தின் கரை அருகே ஆட்டோ ஒன்று அனாதையாக நிற்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது குளத்திற்குள் ராஜேஷ் பிணமாக மிதப்பதை கண்டனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழித்துறை தீயணைப்பு வீரர்களை வரவழைத்து குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டனர். மீட்கப்பட்ட ராஜேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜேஷ் குளத்தில் மூழ்கி இறந்தது எப்படி? என்பது பற்றி மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஷ் மது போதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொன்று உடலை குளத்தில் வீசிச்சென்றார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த சம்பவம் இன்று நட்டாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News