செய்திகள்

செந்தில் பாலாஜி விலகியதால் பாதிப்பு எதுவும் இல்லை - மாரியப்பன் கென்னடி

Published On 2018-12-15 10:02 GMT   |   Update On 2018-12-15 10:02 GMT
அ.ம.மு.க.வை விட்டு விலகுபவர்கள் பூஜ்ஜியத்திற்கு சமம். செந்தில் பாலாஜி விலகியதால் பாதிப்பு எதுவும் இல்லை என்று மாரியப்பன் கென்னடி கூறினார். #MariappanKennedy
மானாமதுரை:

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தி.மு.க.விற்கு சென்றுள்ளது மிகப்பெரிய துரோகம். தி.மு.க.விற்கு செல்வது தற்கொலைக்கு சமம்.

அ.ம.மு.க.வை பொறுத்தவரை யார் போனாலும் கவலை இல்லை. மக்களிடம் மட்டுமே ஆதரவு உள்ளது. செந்தில் பாலாஜி மட்டும் இல்லை. நான் சென்றால் கூட அ.ம.மு.க.விற்கு பாதிப்பு இல்லை.

இதன் மூலம் அவர் டி.டி.வி. தினகரனுக்கு துரோகம் செய்து விட்டார். டி.டி.வி. தினகரனை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதனால் தேர்தல் நடத்தக்கூட இந்த அரசு பயப்படுகிறது.

எத்தனையோ துரோகங்களை பார்த்து விட்டோம். இது ஒன்றும் கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை விட பெரிய துரோகம் தி.மு.க.விற்கு அவர் செல்வது.

அ.தி.மு.க.விற்கு சோதனை வந்தபோது சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்தார். ஆனால் அவர் தான் துரோகத்திற்கு வித்திட்டவர். அ.ம.மு.க.வை விட்டு விலகுபவர்கள் பூஜ்ஜியத்திற்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, சரவணன், நிர்வாகிகள் மேட்டுமடை செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். #MariappanKennedy
Tags:    

Similar News