அசல் 'பனாரஸ் பட்டுச் சேலை'யை அறிவது எப்படி?
- மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை அல்லது ரோமன் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருக்கும்.
- ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
பட்டுச் சேலைகளில் காஞ்சிபுரத்தைப் போல, பனாரசுக்கும் தனி மதிப்பு உண்டு. சரி, அசல் பனாரஸ் பட்டுச் சேலையை அறிவது எப்படி?
பட்டு நூலின் தரம்:
ஒரு பனாரஸ் சேலையின் தரம், அதன் பட்டு நூலின் தரத்தைப் பொறுத்தது. உண்மையான பனாரஸ் புடவைகள் தூய மல்பெரி பட்டு நூலில் நெய்யப்படுகின்றன. மல்பெரி பட்டு மென்மையாகவும், பளபளப்பாகவும், பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாகவும் இருக்கும்.
தூய பட்டு மென்மையாகவும், வழுவழுப்புடனும் இருக்கும். அசல் பட்டுக்கு ஓர் இயற்கையான பளபளப்பு இருக்கும்.
பட்டுப்புடவையின் ஒரு சிறிய நூல் பகுதியை எடுத்து மெதுவாக எரிக்கவும். தூய பட்டு எரிந்தால், முடி கருகும் வாசனை வரும். செயற்கைப்பட்டு என்றால் பிளாஸ்டிக் எரிவது போல வாசனை வரும்.
ஜரிகையின் நேர்த்தி :
பனாரஸ் புடவைகளின் தனிச்சிறப்பு, அவற்றின் ஜரிகை வேலைப்பாடுதான். இந்த ஜரிகை பெரும்பாலும் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் நெய்யப் பட்டிருக்கும்.
உண்மையான பனாரஸ் புடவைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகை, தூய வெள்ளி இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டு அல்லது செப்பு இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும்.
மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை அல்லது ரோமன் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
உண்மையான கைத்தறி பனாரஸ் பட்டுப்புடவைகளில், முன்புறத்தில் உள்ள அதே வடிவமைப்பு, பின்புறத்திலும் தெரியும்.
நெசவு நுட்பம் மற்றும் வடிவமைப்பு :
பனாரஸ் பட்டுப் புடவைகள் தனித்துவமான கைத்தறி நெசவு நுட்பத்துக்காக அறியப்படுகின்றன. வடிவமைப்புகள் புடவையில் நேரடியாக நெய்யப்பட்டிருக்கும்.
தறியில் நெய்யப்பட்டிருந்தால் அவை மெஷின் வேலைப்பாடு போல் இல்லாமல், சற்று ஒழுங்கற்ற அல்லது கையால் செய்யப்பட்டதன் அடையாளத்தைக் கொண்டிருக்கும்.
அசல் பனாரஸ் பட்டுப்புடவைகளில் 'ஜலா' அல்லது 'ஜாக்கார்டு' தறி மூலம் நெய்யப்படும் சிக்கலான வடிவங்கள் காணப்படும்.
இவை பொதுவாக முந்தானையிலும், பார்டர்களிலும் பிரதானமாக இருக்கும்.
புடவையின் எடை, அடர்த்தி:
தூய பட்டு மற்றும் அடர்த்தியான ஜரிகை வேலைப்பாடுகள் காரணமாக, உண்மையான பனாரஸ் புடவைகள் மற்ற பட்டுப் புடவைகளை விட சற்றே கனமாக இருக்கும்.
புடவையை கையில் எடுத்துப் பாருங்கள். அப்போது கனமாக உணர்ந்தால், அது உண்மையான பட்டு மற்றும் ஜரிகையை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதிக எடை, பயன்படுத்தப்படும் பட்டு மற்றும் ஜரிகையின் அளவைக் குறிக்கும்.
துணியை தொட்டுப் பார்த்தால், அது அடர்த்தியாகவும், இறுக்கமாகவும் நெய்யப்பட்டிருப்பதைக் காணலாம். தரம் குறைந்த புடவைகள் மெல்லியதாகவும், தளர்வாகவும் இருக்கும்.
விலை, சான்றிதழ்:
பனாரஸ் புடவைகள் தயாரிப்பதற்கு அதிக நேரம், நுட்பமான வேலைப்பாடு மற்றும் உயர்தர மூலப்பொருட்கள் தேவைப்படுவதால், அவற்றின் விலை சற்றே அதிகமாக இருக்கும்.
மலிவான விலையில் கிடைக்கும் புடவைகள் பெரும்பாலும் கலப்படமாகவோ அல்லது செயற்கைப்பட்டுடன் கூடியவையாகவோ இருக்கும்.
இந்திய அரசின் சில்க் மார்க் சான்றிதழ், புடவையின் தரத்தை உறுதிப்படுத்தும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பகமான கடைகளில் மட்டுமே பனாரஸ் பட்டுப் புடவைகளை வாங்குவது சிறந்தது.