- வேலைக்குச் சென்று நல்ல சம்பளம் பெறும் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு, வருமானத்தை தவறான வழிகளில் முதலீடு செய்வது.
- பாரம்பரியமான பிக்சட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு போன்றவற்றை அளவோடு, விவேகத்தோடு செய்ய வேண்டும்.
நம் நாட்டில், பெரும்பாலானோர் உழைப்பதில் வேறுபாடில்லை. ஒவ்வொருவரும் தத்தமது குடும்பத்துக்காக தம்மால் இயன்ற வரை கடுமையாகத்தான் உழைக்கிறார்கள்.
ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே, வாழ்வில் வசதியாக, வளமாக இருக்கிறார்கள்.
இதன் காரணம் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. அந்த பின்னணி ரகசியத்தை நிதி ஆலோசனை நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
அந்த விவரம்...
பணம்தான் நமக்கு பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதேபோல, புதிதாக வேலைக்குச் செல்பவர்கள், பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர முயல வேண்டும். அந்த நிறுவனப் பணிகள் 'கோல்டு ஸ்டாண்டர்டு ஜாப்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
பெரிய நிறுவனங்களில் பணிபுரிவது உங்கள் திறமையை மட்டுமல்ல, உங்களது 'புரொபைலையே' வளர்ந்துவிடும். பெரிய நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்து விலக நேர்ந்தால், உடனே அதைப் போன்ற மற்றொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும்.
ஆனால் நடுத்தர, சிறு நிறுவனத்தில் இருந்து விலகினால் அப்படி அமையாது. நீங்கள் வேலைக்குச் சேரும் நிறுவனத்தின் 'பிராண்ட் வேல்யூ' மிக முக்கியமானது. மதிப்புமிக்க நிறுவனங்களில்தான் உங்களால் குறுகிய காலத்திலேயே பெரிய சம்பளத்துக்குச் செல்ல முடியும்.
ஆனால் இவ்வாறு வேலைக்குச் சென்று நல்ல சம்பளம் பெறும் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு, வருமானத்தை தவறான வழிகளில் முதலீடு செய்வது.
பாதுகாப்பானது என்ற கருத்தில், பிக்சட் டெபாசிட்களில் நாம் பணத்தைப் போடுவோம். ஆனால் அந்த தொகை வளர்ந்து இருக்கும்போது, பணவீக்கம் காரணமாக அந்தப் பணம் போதுமானதாக இருக்காது. எனவே நாம் தொடர்ந்து நெருக்கடி நிலையிலேயே இருப்போம்.
அதேநேரம், கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு 'இன்புளூயன்சர்' சொல்கிறார் என்பதற்காக நாம் எந்த திட்டங்களிலும் முதலீடு செய்யக் கூடாது.
பாரம்பரியமான பிக்சட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு போன்றவற்றை அளவோடு, விவேகத்தோடு செய்ய வேண்டும்.
இளம் பருவத்தினர், இந்த வயதில்தான் 'ரிஸ்க்' எடுக்க முடியும் என்பதால் ஈக்விட்டி முதலீடுகள் குறித்து தெரிந்துகொள்ளவும், அவற்றில் ஈடுபடவும் நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
நிதி ஆலோசகர்கள் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது, பணக்காரர்களுக்கும் நடுத்தரவர்க்க மக்களுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம், பணக்காரர்கள் அதிக வருமானம் ஈட்டுவார்கள், அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியை சரியாகத் திட்டமிட்டு குறைப்பார்கள். ஆனால் நடுத்தர மக்களோ, எவ்வளவு வரி வருகிறதோ அதைச் செலுத்துவார்கள். மாறாக, திட்டமிட்டு முதலீட்டையும் சேமிப்பையும் செய்தால் வரியையும் குறைவாக செலுத்தலாம். உங்களுடைய செல்வத்தையும் பெருக்கலாம் என்கின்றனர்.
பெரும் பணக்காரர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்வதெல்லாம் கிடையாது. அவர்கள் பணத்தைக் கொண்டுதான் பணத்தைப் பெருக்குகிறார்கள். எனவே உங்களுடைய பணத்தை சரியாக முதலீடு செய்யுங்கள் என்பதுதான் நிதி நிபுணர்களின் முக்கியமான அறிவுரையாகும்.