பீகாரில் தயாராகும் 'அல்மாண்ட் கிட் சிரப்' சளி மருந்துக்கு தமிழகத்தில் தடை
- இந்த மருந்தை வைத்திருப்பவர்கள் அதை முறையாக அழிக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- மருந்தின் வினியோகத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'அல்மாண்ட் கிட்' சிரப்பில் எதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கலப்படமானது கண்டறியப்பட்டு உள்ளது. 'அல்மாண்ட் கிட் சிரப்' மருந்தை உட்கொண்டால் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த மருந்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை செய்துள்ளது.
மேற்கூறிய மருந்தில் உள்ள எதிலீன் கிளைக்கால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பு, மூளை, நுரையீரல் போன்ற வேறு உறுப்புகளையும் பாதிப்படையச் செய்து இறப்பை ஏற்படுத்தக்கூடும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த மருந்து வினியோகிக்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நுகர்வோர்கள் மருந்துகள் வாங்கும்போது பேட்ச் எண்களை (ஏ.எல்.24002) சரிபார்த்து அதன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
இந்த மருந்தை வைத்திருப்பவர்கள் அதை முறையாக அழிக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மருந்தின் வினியோகத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் புகார்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மருந்து குழந்தைகளுக்கு சளி மற்றும் ஒவ்வாமைக்கு மருந்தாக பயன்படுத்தக்கூடியது ஆகும்.