செய்திகள்

பள்ளி தொடக்க நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி-சைக்கிள்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-12-01 06:54 GMT   |   Update On 2018-12-01 06:54 GMT
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #TNMinister #Sengottaiyan
கோபி:

கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் கதிரவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.

மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்.

தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. யூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும்.

மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இவர் அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News