சினிமா செய்திகள்

காந்தாரா சர்ச்சை - தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் மனுத்தாக்கல்

Published On 2026-02-23 21:10 IST   |   Update On 2026-02-23 21:10:00 IST
  • படத்தின் தெய்வீகக் கதாபாத்திரமான 'தைவா' (Daiva) போலச் செய்து காட்டினார்.
  • இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.

கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா சாப்டர்-1 பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் புகழ் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார்.

இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.

இதனிடையே இது கடலோர கர்நாடகாவின் புனிதமான 'பூத கோலா' கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் கூறி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் மேத்தல் என்பவர் ரன்வீர் சிங்மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல் (பிரிவு 299) மற்றும் மத விரோதத்தைத் தூண்டுதல் (பிரிவு 196) உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன்மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர் ரன்வீர் சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Tags:    

Similar News