மீண்டும் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளராக கிம் ஜாங் உன் தேர்வு!
- கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- மகள் கிம் ஜு ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வடக் கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 9வது மாநாட்டில் கிம் ஜாங் உன் ஒருமனதாக மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2016-ல் மீண்டும் தொடங்கப்பட்டது. இம்மாநாட்டில் பேசிய கிம் ஜாங், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு "கடுமையான பொருளாதாரத் தடைகளையும்" தட்டுப்பாடுகளையும் முறியடித்து, பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரவித்தார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொருளாதாரக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது கட்சியின் கடமை எனவும் தெரிவித்தார்.
அடுத்ததாக இவரது மகள் கிம் ஜு ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் தனது தந்தையுடன் பல முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.