ஜெருசலேமில் சந்திப்போம்.. விரைவில் இஸ்ரேல் பயணம் - நண்பர் நேதன்யாகு என பதிவிட்டு மோடி நெகிழ்ச்சி
- இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி
- இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 25 முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் இந்த பயணம் குறித்து இரு தலைவர்களும் எக்ஸ் தளத்தில் இன்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் என்றும், இந்தியா-இஸ்ரேல் உறவை இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி என்றும் நேதன்யாகு தனது பதிவில் வர்ணித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பதிவில், " நன்றி, நண்பர், பிரதமர் நேதன்யாகு. இந்தியா-இஸ்ரேல் இடையிலான பிணைப்பு, நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. வரவிருக்கும் சந்திப்பின் போது நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஜெருசலேமில் உங்களைப் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும். இதற்கு முன்பு ஜூலை 2017-ல் அவர் இஸ்ரேலுக்குச் சென்றார். இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடியே ஆவார்.
உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடைய வெளியான கோப்புகளில், பிரதமர் மோடியின் 2017 இஸ்ரேல் பயணம் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.