உலகம்

வரும் மாதங்களில் புதிய வரி விதிப்புகளை வெளியிடுவேன்- அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published On 2026-02-22 11:42 IST   |   Update On 2026-02-22 11:42:00 IST
  • அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
  • அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.

பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

Similar News