செய்திகள்

புயலில் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை கடும் உயர்வு

Published On 2018-11-22 08:12 GMT   |   Update On 2018-11-22 08:12 GMT
கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
சென்னை:

கஜா புயல் தாக்கியதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து விட்டன.

இதனால் தென்னந்தோப்பு வைத்திருந்த விவசாயிகள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு தினசரி 100 லாரிகளில் தேங்காய் மற்றும் இளநீர் அனுப்பப்படும். ஆனால் இப்போது தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் சாய்ந்து கிடப்பதால் சென்னைக்கு வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தேங்காய் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை தேங்காய் விலை உயர்ந்து விட்டது. 20 ரூபாய்க்கு விற்ற நடுத்தர தேங்காய் இப்போது 25 ரூபாய்க்கு விற்கிறார்கள். 15 ரூபாய்க்கு கிடைத்த சிறிய தேங்காய் 20 ரூபாயாக உயர்ந்து விட்டது. பெரிய தேங்காய் 30 ரூபாய் இருந்து 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், அடையார், மயிலாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளிலும் தேங்காய் விலை அதிகளவு உயர்ந்து விட்டது.

இதுபற்றி சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் தேங்காய் வியாபாரி ராமசாமி கூறியதாவது:-

சென்னைக்கு தினசரி அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சாவூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, தேனி, நாகர்கோவில், ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் தேங்காய் வரும்,

இப்போது கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது.

ஒரு லாரிக்கு 10 டன் வீதம் தினசரி 60 லாரிகளில் தேங்காய் வருவது நின்று விட்டது. இதனால் தேங்காய் விலை 5 முதல் 7 ரூபாய் வரை உயர்ந்து விட்டது.

அதேபோல் இளநீர் விலையும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் 40 வருடத்து மரம் ஆகும். இனி மேல் மரம் வைத்தால் 7 ஆண்டுக்கு பிறகுதான் பலன் கிடைக்கும்.

இதுவரை காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்ற ஊர்களுக்கு தேங்காய் அனுப்பி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி அவர்களின் தேவைக்கு மற்ற ஊர்களில் இருந்து தேங்காய் அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கஜா புயலில் சாய்ந்து கீழே முறிந்து கிடக்கும் மரங்களில் இருந்து தேங்காய் பறித்து இப்போது அனுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு இதுவும் நின்று விடும். அப்போது தேங்காய் விலை மேலும் உயரும்.

இவ்வாறு வியாபாரி ராமசாமி கூறினார்.  #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers

Tags:    

Similar News