"டப்பா என்ஜின்" விமர்சனத்திற்கு தமிழிசை பதிலடி: திமுக அரசு "ட்ரபிள் என்ஜின்" எனச் சாடல்!
- பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது
- பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தே.ஜ.கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், "பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதற்கு, பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் இன்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் மோடி அவர்களை விமர்சிக்கிறீர்கள்.
குஜராத், மகாராஷ்டிரா, உத்தர் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் இஞ்சின் trible என்ஜின் கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்த பயந்து தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஒட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல் ..
தமிழ்நாட்டில் நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா இஞ்சின்" என்று விமர்சிக்கிறீர்கள். நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே...... தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.