செய்திகள்
தருமபுரி அருகே திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் புதுப்பெண் மாயம்
தருமபுரி அருகே புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் தனியார் டிராக்டர் கம்பெனி நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீனா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
சம்பவத்தன்று கணவன்- மனைவி 2 பேரும் முத்தம் பட்டியில் உள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது தான் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நவீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் பதறிப்போன கணவர் அன்பரசன் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் நவீனா கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அன்பரசன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.