செய்திகள்
பள்ளி வேன் மோதி பலியான சிறுவன்

அறந்தாங்கி அருகே பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் பலி

Published On 2018-10-05 07:48 GMT   |   Update On 2018-10-05 07:48 GMT
அறந்தாங்கி அருகே அண்ணனை பள்ளிக்கு அனுப்ப வந்த தம்பி வேன் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் அஜ்மல் கான். இவருக்கு முகமது ஆபின் (வயது 5), முகமது ஐமன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இதில் முகமது ஆபின் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். தினமும் வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

இன்று காலை முகமது ஆபின் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டான். அதே சமயம் பள்ளி வேனும் வந்தது. பள்ளிக்கு செல்லும் அண்ணனை வழியனுப்புவதற்காக முகமது ஐமனும் வந்தான். முகமது ஆபின் வேனில் ஏறியதும் டிரைவர் வேனை பின்னோக்கி நகர்த்தினார்.

வேனுக்கு பின்னால் சிறுவன் முகமது ஐமன் நின்றதை கவனிக்கவில்லை. இதில் வேனின் பின்சக்கரத்தில் சிக்கி முகமது ஐமன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதுஐமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் அறிவழகன் (55) என்பவரை கைது செய்தனர்.

அண்ணனை பள்ளிக்கு அனுப்ப வந்த தம்பி வேன் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News