இந்தியா

குடியரசு தினவிழா: 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு

Published On 2026-01-20 14:16 IST   |   Update On 2026-01-20 14:16:00 IST
  • டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
  • இதில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

புதுடெல்லி:

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதற்காக நேற்று முதல் 26-ம் தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை மற்றும் பிற மத்திய ஆயுத படைகள் இணைந்து வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய, பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை கவுரவிக்கும் வகையில், 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக பணியாற்றியவர்கள், சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர். அவர்கள் கடமை பாதையில் அமர வைக்கப்படுவர்.

விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News