இந்தியா நக்சல் இல்லாத நாடாக மார்ச் 31-க்குள் மாறும்: அமித்ஷா உறுதி #Naxal
- அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
- அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள முண்டாலியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 57-வது நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது அமித்ஷா பேசியதாவது:
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி உள்ளனர்.
பெரிய சவால்கள் இருந்தபோதும் பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு பணியையும் ஒழுக்கத்துடனும், உறுதியுடனும் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்த்தேக்கங்கள் முதல் நாடாளுமன்றம் வரை முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கியாகப் பயன்படுகிறது.
அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். தொழில்துறை அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துணையாக உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும் என தெரிவித்தார்.