சமூக ஊடகங்களுக்கு செக்: கர்நாடகா, ஆந்திரா அரசுகளின் அதிரடி முடிவு... தமிழ்நாடு பின்பற்றுமா?
- இந்தியாவில் இந்தத் தடையை கொண்டுவரும் முதல்மாநிலம் கர்நாடகா.
- அடுத்த 90 நாட்களுக்குள் தடை நடைமுறைப்படுத்தப்படும்
கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்திலும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சட்டப்பேரைவையில் வெளியிட்டார். அடுத்த 90 நாட்களுக்குள் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இன்றுகாலை கர்நாடக அரசு, பட்ஜெட் தாக்கலின்போது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில அறிவிப்பும் வந்துள்ளது.
சிறுவர் மற்றும் சிறுமிகளிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் போதை (Mobile Addiction), மனநலப் பாதிப்புகள் மற்றும் கல்வித் தரக் குறைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஏற்கனவே இதுபோன்ற சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவரும் முதல் மாநிலமாக கர்நாடகா உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆந்திரா அதனை பின்பற்றியுள்ளது.