#Train ஆடையைக் கழற்றி அந்தரங்க பகுதியை காட்ட கூறிய அதிகாரி - ரெயில் டிரைவரின் வேதனை அனுபவம்
- சாதி குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
- சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரவியது.
உத்தரபிரதேசத்தின் லக்னோ ரெயில் பிரிவில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ஆக பணிபுரிபவர் ராஜேஷ் மீனா. பழங்குடியினத்தை சேர்ந்தவரான, இவருக்கு மூல நோய் பாதிப்பு இருந்துள்ளது. அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சைக்காக மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். அவரது மேற்பார்வை அதிகாரியான தலைமை குழு கட்டுப்பாட்டாளர் ரத்தன்குமார், அவருக்கு விடுமுறை வழங்க மறுத்துவிட்டார்.
பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு சமீபத்தில் அவருக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சைக்கான காயம் விடுமுறை நாட்களுக்குள் ஆறாததால் அவர் மேலும் விடுமுறை கேட்டுள்ளார். அப்போது அவரது மேலதிகாரி ரத்தன்குமார் 'ராஜேஷ் மீனாவுக்கு காயம் உண்மையிலேயே இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஆடையைக் கழற்றி அந்தரங்க பகுதியை காட்டச் சொன்னதாகவும் தெரிகிறது. மேலும் சாதி குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேஷ் மீனா ஜனாதிபதி மற்றும் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் பல அரசியலமைப்பு அதிகாரிகளுக்கும் புகார் கடிதம் அனுப்பினார். இந்த சம்பவத்தின் இடையே சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுகுறித்து ரெயில்வே மூத்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும், ஆடையை கழற்றச் சொன்ன அதிகாரி மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.