செய்திகள்

அதிமுக அரசை கண்டித்து புதுக்கோட்டையில், 18-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-15 11:20 GMT   |   Update On 2018-09-15 11:20 GMT
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந்தேதி காலை9 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடக்கிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர்கள் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ., கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசில் இன்னல்களுக்கு ஆளாகாத மக்களே இல்லை என்ற நிலையில் அ.தி.மு.க ஆட்சி தொடர்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் செய்யாத அமைச்சர்களே இல்லை என்ற வண்ணம், அனைத்து துறைகளிலும், குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், முட்டை மற்றும் பருப்பு கொள்முதலில் ஊழல், பேருந்து வாங்குவதில் ஊழல், குட்கா ஊழல் போன்ற ஊழல்கள் நடந்துள்ளது.

ஊழல் கறை படிந்த இந்த அ.தி.மு.க அரசை தூக்கி எறிவோம் என்ற தி.மு.க. தலைவரின் அறை கூவலுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந்தேதி காலை9 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள, இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வட்டக்கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசில் நடைபெற்று வரும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று கூடி இப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்யபாடுபடுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News